27 மார்ச், 2012

எங்கெங்கு காணினும் சக்தியடா... சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தளிஞ்சி கிராமம்


செல்வதற்குப் பாதையில்லாத மலைவாழ் கிராமம் ஒன்றில் முழுக்க முழுக்க சோலார் பவரில் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார்கள். தவிர, சாண எரிவாயுவிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

கிட்டதட்ட எழுபது  டிகிரி கோணத்தில் பச்சை பசேல் என்று நெகுநெகுவென்று வளர்ந்து கம்பீரமாக வரவேற்கிறது மூணார் மலை. நமது பயணம் அங்குள்ள தளிஞ்சி என்கிற மலைவாழ் மக்கள் கிராமத்துக்கு. அங்கு என்னதான் சிறப்பு?

இந்தக் கிராமத்துக்கு மின்சாரம் கிடைப்பது முழுக்க முழுக்க சோலார் சக்தியில்தான். இது தவிர, சாண எரிவாயுவில் இருந்தும் இவர்கள் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் அட என்று வியந்தோம்.  
இந்தக் கிராமம் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்றோம். வழியில்,யானைகள் தாக்கும் அபாயம் இருந்ததால் அவரே இரண்டு பாதுகாவலர்களை நம்முடன் அனுப்பி வைத்தார். மலையில் பல்வேறு வன விலங்குகள் வாழ்வதால் வாகனங்களுக்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் நடைராஜா பயணம்தான்.



திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து, மூணார் செல்லும் பேருந்தில் பயணித்தால்  22  கிலோ மீட்டர் தொலைவில் வருகிறது கேரளாவின் சம்பக்காடு. அங்கு இறங்கிக் கொண்டு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக கரடு முரடான பாதையில் 7 கிலோ மீட்டர் நடைபயணம்.   5  நிமிடம்தான் நடந்திருப்போம். சலசலவென்று வாயாடிக் கொண்டு குளிர்ச்சியாக நதி ஒன்று குறுக்கிடுகிறது. கண்களால் நதியில் நனைந்தவாறே பாலத்தில் ஏறி நதியைக் கடந்தோம். அதன்பிறகு பாதையே கிடையாது.  

அடர்ந்த மரங்கள் பிரம்மாண்ட கூடாரமாய் விரிந்து பகலில் ஓர் இரவாய் மயக்கம் காட்டிக் கொண்டிருந்தனஅடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே தனது கதிர்களை நுழைக்கப் போராடிக் கொண்டிருந்தது சூரியன். ஆனால், பாவம், அதற்குத் தோல்விதான். வழியில் தலையிலும் முதுகிலும் பெரிய,பெரிய மூட்டைகளை சுமந்து கொண்டு ஆண்களும், பெணகளும் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.சிறிது தூரம் நடந்திருப்போம். ‘உய்ங்ங்...’ என்று ஒரு ரீங்காரம். இது வரை நாம் பார்த்திராத ஒரு தினுசான கொஞ்சம் பெரிய சைஸ் வண்டு. நடுங்கி அப்படியே நின்றோம். நம்மைச் சுற்றிப் பறந்து சிறிது நேரம் சங்கீதக் கச்சேரி நடத்திய அந்த வண்டு பிறகு, வேறெங்கோ பறந்தது. தொடர்ந்து நடக்கத் தொடகினோம். வழியில்  மேலும் பலவித வண்டுகள், விநோதப் பூச்சிகள் நடுநடுவே திடீரென்று குறுக்கிட்டு திகிலூட்டின.   7 கிலோ மீட்டர் நடைபயணத்துக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டு வீடுகள் தென்பட்டனஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது, கும்பலாக உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு செய்தி சேனல். ‘அட’  

அங்கிருந்த மல்லிகா என்கிற பெண் நம்மிடம் பேசத் தொடங்கினார்.,  "200 வருஷங்களுக்கு முன்னாடிலேர்ந்தே பரம்பரை  பரம்பரையா இந்தக் கிராமத்தில் இருக்கோம். ஃபாரஸ்ட்  அதிகாரிங்க, எங்க கிராம மக்களுக்குன்னு 800 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்காங்க, அதுலதான் 150 குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். வீடு கட்டுன இடம் போக மீதி இடத்துல மலையை  சரிசெய்து அதில் பீன்ஸ், காய்கறிகள், நெல் பயிரிட்டு விவசாயம் செய்றோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக 4 ஏக்கர் வரை நிலம் உள்ளது” என்று சொல்லிக் கொண்டே வந்தவரிடம் சோலார் மின்சாரம் பற்றிக் கேட்டோம். உற்சாகமாக் கூறத் தொடங்கினார் 

காலங்காலமா எங்க கிராமம் இருளில்தான் மூழ்கிக் கிடந்தது. எல்லா வீடுகளிலும் மண்ணெண்ணெய் விளக்குத்தான். பிள்ளைகளும் அந்த வெளிச்சத்தில்தான் ரொம்ப  சிரமத்தோடு படிப்பார்கள்ஊரில் ரேஷன் கடை இல்லாததால் 7 கிமீ தொலைவில் உள்ள சின்னார் பஞ்சாயத்தில் போய் மண்ணெண்ணெய் வாங்கி வருவோம், அதுவும் கொஞ்ச நாளில் தீர்ந்துடும். அந்த மாதிரி நேரங்கள்ல  வாசல்ல தீ மூட்டி பிள்ளைகளைப்  படிக்க வைப்போம்அரசு அதிகாரிகளிடம், எங்கள் குறையைச் சொல்லி  பலமுறை மின்சார வசதி செய்துத் தரச் சொல்லிக் கேட்டோம். இங்கு  பல அரிய வகை உயிரினங்கள் வசிப்பதால்,அவைகளுக்கு பாதிப்பு ஏற்ப்படும் என்று மின்சார வசதி செய்து தரலை. இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்தைப் பார்வையிட்டு, சூரிய ஒளியில் இயங்கும் சோலார் விளக்குகளைப் பொருத்துவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதன்படியே ஒவ்வொரு வீட்டிற்கும் சோலார் விளக்குகளை அமைத்துக் கொடுத்தனர்” என்றார்


அடுத்து கிராமத்தின் மூப்பர் (ஊர்த் தலைவர்) ராஜனைச் சந்தித்தோம். "நாங்கள் டவுனுக்குச் செல்லணும்னா 7 கிலோ மீட்டர் கரடு, முரடான வழியில்தான் செல்லணும்வெளி ஆட்கள் இங்கு வந்தால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று, அரசு பாதை அமைக்கலை. நாங்களாவது பரவாயில்லை. மஞ்சம்பட்டி, புதுவயல், மூதுவார்குடி, மூங்கில் பள்ளம் போன்ற கிராமங்கள் 13 கிமீ தொலைவில் உள்ளன. இங்கு வாழும் மக்களும்  நடந்து வந்து, எங்கள் கிராமத்தை தாண்டிதான் டவுனுக்குச் செல்வார்கள். காலை 10 மணிக்குமேல் வெளியில் சென்று மாலை 5 மணிக்குள் வீடு திரும்பி விடுவோம். ஏனென்றால் போகும் வழியில் யானைகள் எப்போ  வேணாலும் குறுக்கே வரும். ஒருமுறை எங்கள் ஊரைச் சேர்ந்த காளியாத்தாள் என்ற பெண் விறகு பொறுக்கச் செல்லும்போது யானை மிதித்து இறந்துவிட்டார். அதிலேர்ந்து ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோம். எங்கள் மூதாதையர்கள் காலத்திலிருந்தே,இன்றுவரை கைக்குத்தல் அரிசிச் சோறுதான் சாப்பிடுகிறோம். அதனால் உடம்புக்கு முடியலைன்னு படுத்தில்லை...” என்கிறார் பெருமையுடன். பின்னர் அவர் நம்மை டீ சாப்பிடும்படி அன்பு வேண்டுகோள் வைத்தார். டீ வந்தது. மூலிகை கலந்த கக்கன் டீ. தாவர வாசனையும் சூப்பர் டேஸ்ட்
மேல் நாவில் டீயின் சுவை மிதந்திருக்க அங்கிருந்து நகர்ந்தோம். கர்னாத்தா என்பவரின் வீட்டுக்குப் போனோம். அவர் நம்மிடம் பேசத் தொடங்கினார். "எங்கள் கிராமத்துக்கு 2001 -ம் ஆண்டுதான்   பள்ளிக்கூடம் வந்ததுஇங்குள்ள பள்ளியில் 5 ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், குழந்தைகள் மேற்படிப்பை உடுமலையில் உள்ள பள்ளியில் ஹாஸ்டலில்  படித்து வருகிறார்கள். நாங்கள்தான் படிக்கலை. எங்கள் குழந்தைகளாவது படிக்கட்டுமே என்ற வைராக்கியத்தோடு படிக்க வைக்கிறோம். முன்பெல்லாம் இரவில் சரியாக வெளிச்சம் இல்லாததால் குழந்தைகள் படிக்கச் சிரமமாக இருக்கும். மின் வெளிச்சமே அறியாத எங்கள் ஊரில், சோலார் விளக்குகள் அமைந்ததால், தற்போது குழந்தைகள் மின் வெளிச்சத்தில் ஆர்வமாக அதிக நேரம்  படிப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமா இருக்கு.  

எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க எங்களுடனேயே தங்கி கல்வி சொல்லித்தரும் ஆசிரியர் மணி அவர்களுக்கு, எங்கள் கிராமமே கடமைப்பட்டுள்ளது. வாரம் 5 நாட்களும் இங்கேயே தங்கி பாடம் நடத்திட்டு, வார இறுதியில் ஒருமுறை மட்டுமே அவரது வீட்டிற்குச் செல்லும் மணி சார் எங்களுக்குக் கிடைத்த தெய்வமாக நினைக்கிறோம். இங்குள்ள ஆற்றுத் தண்ணீரில் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து  பைப் மூலம் தண்ணீர் எடுத்து நீரை சுத்திகரித்துக் குடிக்கிறோம். ஒவ்வொரு வீட்டிற்கு 2 பல்ப்பும், அனைத்து தெருவிற்கும் விளக்குகளும் அமைத்துக் கொடுத்துள்ளனர்



சூரிய வெளிச்சம் இருக்கும்போது மட்டும்தான், மின்சாரம் கிடைக்கும். இது காட்டுப் பகுதியாக இருப்பதால் இங்கு அடிக்கடி மழை பெய்யும். அப்பொழுதெல்லாம் மின்சாரம் இல்லாமல் இருட்டில்தான் பொழுதைக் கழிப்போம். இதனால் சூரிய வெளிச்சம் கிடைக்காத காலத்தில் நாங்கள் வளர்த்துவரும் ஆடு, மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து, சாண எரிவாயு மூலமாகவும் மின்சாரம் தயாரிக்கிறோம். தற்போது முழுமையாக எங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது”  என்று சொல்லிக் கொண்டே நம்மிடம் வீட்டில் உள்ள விளக்கைப் போட்டு  காட்டினார்  கர்னாத்தா. மதிய சாப்பாட்டை அங்கேயே முடித்துக் கொண்டோம். கேழ்வரகு கூழும், ,பெயர் தெரியாத விதவிதமான பழங்களையும் சாப்பிட கொடுத்தார்கள். வாழ்க்கையில் இதற்கு முன் அப்படி ஒரு சுவையான உணவை உண்டதில்லை என்று உறுதியாகக் கூறலாம்இங்குள்ள அனைவரின் வீடுகளிலும் டிவியும், டிடிஹெச் ஆண்டனாவும் உள்ளது. தவிர, விவசாயம் செய்யும் நிலங்களில் அடிக்கடி பன்றிகளும், யானைகளும் வந்து அட்டகாசம் செய்வதால், நிலங்களைச் சுற்றி சோலார் சக்தி மூலம் மின் வேலிகள் அமைத்துள்ளார்கள்.. அதேபோல்  கிராமத்தின் பாதுகாப்புக்காகவும் ,ஊரைச் சுற்றிலும் மின் வேலிகள் அமைத்துள்ளார்கள். நகரத்து வாசனையே படாத இந்தக் கிராமத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், திருமணத்தின்போது குண்டுமணி அளவு கூட தங்கமோ, வரதட்சணையோ ஆண்கள் வாங்குவதில்லை. தவிர திருமணத்தின் அனைத்துச் செலவுகளையும் மாப்பிள்ளை வீட்டாரேஏற்றுக் கொள்கிறார்கள்.  

மக்கள் இங்கு குடியிருப்பது வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இவர்களை பல முறை அரசு அதிகாரிகள் நேரில் சென்று, “ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் தருகிறோம். நகரத்திற்குச் சென்றுவிடுங்கள்” என்று கூறியும்,இயற்கை வாழ்க்கையை இவர்கள் நேசிப்பதால் டவுனுக்குச் சென்று குடியேற மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள். இவர்களுக்கு வெளியூரில் சொந்த பந்தங்கள் என்று யாரும் இல்லை. இதே ஊரிலேயே பெண் எடுத்து, பெண் கொடுத்துக் கொள்கிறார்கள். மேலும்  6 குதிரைகளை தங்கள் பயன்பாட்டுக்காக வைத்துள்ளனர்

"
மின் விளக்குகள் இல்லாததால், முன்பெல்லாம் விஷப் பாம்புகள் கடித்து எங்கள் ஊரில் பல பேர் இறந்துள்ளனர். தற்போது விளக்குகள் எரிவதால் அந்த நிலை மாறியுள்ளதுஎங்கள் ஊரில் பலர் செல்போன் வைத்துள்ளார்கள். இங்குள்ள காடுகளில் விலையும் ஈச்சம் புற்களை அறுத்துக் கொண்டுவந்து காய வைத்துதுடைப்பம் செய்து, டவுனுக்குச் சென்று விற்கிறோம். இதில் தான் எங்களுக்கு அதிக வருமானமே கிடைக்கிறது. கிராமத்தினர் அனைவருக்கும் ஒரே ஒரு வருத்தம்தான். இங்கு மருத்துவமனை கிடையாது. அதனால் பெண்களின் கர்ப்பக் காலத்தில் பிரசவ வலியின்போது,எந்த நேரமாக இருந்தாலும் தொட்டில் கட்டி,நான்கு பேராக தூக்கிக் கொண்டு ஓடுவோம். 7 கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ்சைப் பிடித்து மருத்துவமனை செல்வதற்குள் பல பெண்கள் வலியால் சிகிச்சை கிடைக்காமல் இறந்திருக்கிறார்கள்” என்று வருத்தமுடன் சொல்கிறார் மாதவன் என்ற முதியவர்





மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. இப்போதே கிளம்பினால்தான் பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்று உடன் வந்த பாதுகாவலர்கள் கூற, கிளம்பத் தயாரானோம். அப்பொழுது ஒரு சிறுமி ஓடி வந்து ஆசையுடன் எதையோ கொடுத்தாள். வாங்கிப் பார்த்தோம். மலையில் பறித்த நாவற்பழங்கள்- கன்னங்கரேல் நிறத்தில். அவளுக்கு ஒரு ‘உம்மா’ கொடுத்துவிட்டு நாவல் பழங்களை தின்றவாறே, இறங்க மனமின்றி மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம்
அன்புடன்
சர்பனா

18 பிப்ரவரி, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - எப்பொழுதும் உன் கற்பனையே


"முப்பொழுதும் உன் கற்பனைகள்" தலைப்புக்கேற்ற மாதிரியே படமும் கவிதையா இருக்கு.இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு,எப்பொழுதும் உன் கற்பனையேன்னு காதலிக்கும் ஆண்கள் தங்கள் காதலிகளின் கற்பனைகளில் திரிவார்கள் என்பது மட்டும் நிஜம்.
நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்க்க காரணம்,"படத்தோட அழகான தலைப்பு,ஒருமுறைப் பாடல் (என்னோட ஃபேவரைட் பாட்டு ),மைனா படத்தில் கிடைத்த புகழை விட,முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் என்னை மேலும் உயரத்திற்கு கொண்டுப் போகும் என்று கூறிய அமலாபாலின் பில்டப்.இந்த 3 காரணங்களாலேயே படம் பார்க்க ஆவலா இருந்தேன்.


அமலாபால் கொடுத்த பில்டப்புக்கு,நல்லா நடிச்சி இருப்பாங்கன்னு பார்த்தேன்.மைனா இயக்கிய பிரபு சாலமனை தவிர வேறு எந்த இயக்குனரும் அமலாவிடம் இருந்து நடிப்பை வெளிக்கொணரவில்லை.மற்றவர்கள் வெறும் கவர்ச்சியை மட்டும் தான் வெளிக்கொண்டு வந்திருக்காங்க:)அமலாவோட  நடிப்பு யதார்த்தமா இல்லாம செயற்கை தனமாவே இருக்கு.( முகபாவனைகளை எப்படி வெளிப்படுத்துறதுன்னு வடிவேலுவை பயிற்சி கொடுக்க சொன்னாத்தான் சரிப்பட்டு வருவாங்கன்னு நினைக்குறேன்:) ஒருமுறை பாடலுக்கு அமலாபால் ஒரு டான்ஸ் ஸ்டேப் போடுவாங்கப் பாருங்க ராமராஜனே அந்த இடத்துல தோற்றுப் போய்டுவாரு:)))அமலா கதையோட ஒட்டவே இல்ல. 

ஐடி துறையில் வேலைப்பார்க்கும் அதர்வா தன்னுடன் புராஜெக்ட் செய்ய வந்த தோழி அமலாபால் மீது கண்மூடித்தனமாக காதல் கொள்கிறார்.இதுத் தெரியாத அமலாவோ, புராஜெக்ட் முடிந்தவுடன் அமெரிக்கா சென்றுவிட்டு வேறொருவருடன் நிச்சயதார்த்தமும் முடிந்து திருமணம் நடக்க 15 நாட்கள் இருக்கும் தருவாயில் அலுவலக வேலையாக சென்னை வருகிறார்.தன்னையே பைத்தியமாக காதலிக்கும் அதர்வாவை சந்தித்தாரா,இல்லையா,அவரது காதல் தெரிந்ததா,சேர்ந்தார்களா என்பதை த்ரில்லர் + ட்விஸ்ட்களோடு
சுவாரசியமா சொல்வது தான் முப்பொழுதும் உன் கற்பனைகள்.முதல் பாதியில் படத்தின் காட்சியமைப்புக்களை புரியாதது போல் அமைத்து,பின்பாதியில் அனைத்திற்கும் விடைக் கொடுத்திருப்பதில் இயக்குரனரின் சாமர்த்தியம் புரிகிறது. 


ஐடி துறையில் நடக்கும் உண்மையான சில அவங்களை பதிவு செய்ததற்காகவும்,நடுநடுவே ட்விஸ்ட்கள் வைத்து படத்தில் விறுவிறுப்பு கூட்டியதற்க்கும் இயக்குனர் எல்ரெட் குமாரை பாராட்டலாம்.எல்ரெட் குமாருக்கு இது முதல் படமாம்.(நம்பமுடியவில்லை என்னால் நம்பமுடியவில்லை:).அத்தனை முதிர்ச்சி.இயக்குனராக இருந்துக்கொண்டு படத்தையும் இவரே தயாரித்திருக்கிறார்.வாழ்த்துக்கள்!!!(ஆனால்,பார்த்திபனின் குடைக்குள் மழை படம் லைட்டா எட்டிப் பார்க்குது  சார்:)) 

படத்தின் நிஜ ஹீரோக்கள் காஸ்டியூம் டிசைனர்,அதர்வாவின் அம்மாவாக நடித்த அனுபமா,இசையமைப்பாளர் ஜி,வி பிரகாஷ் தான்.கதை ஐடி துறை என்பதால் படத்திலும்,பாடல்களிலும் அதர்வா,அமலாபாலின் காஸ்டியூம்கள் படத்தோடு ஒன்றி நம்மை ரசிக்க வைக்கிறது.அம்மாவாக நடித்திருக்கும் அனுபமா முகத்தில் ஓராயிரம் பாவனைகள்.தன் கணவர் இறந்தவுடன்,மற்ற ஆண்களின் கண்களில் இருந்து தப்புவதற்காக மொட்டையடித்து மூளியாக்கி கொள்வதாகட்டும்,மிரட்டி வட்டி வசூலிப்பதிலும்,தன் மகனுக்காக உருகுவதாகட்டும் நம்மையும் அவருடன் சேர்ந்து உருக வைத்துள்ளார்.இந்தப் படத்தில் நம் மனதில்  பதிவது அனுபமா மட்டுமே.சந்தானம் தன்னுடைய நக்கலான யதார்த்தமான
காமெடிகளால் நம்மை வயிறு குலுங்க ரசிக்க வைத்து சிரிக்க வைக்கிறார்.சந்தானம் அமலாபாலை கடத்தப்போகும் காட்சிகள் செம:)
 
ஜீவி பிரகாஷ் பின்னணி இசையிலும், பாடல்களிலும் மிரட்டியிருக்காரு.ஒருமுறை,கண்கள் நீயே பாடல்கள் மனதில் நிற்கும் ரகம்.ஒருமுறை பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது:)கண்கள் நீயே பாடல் நம் அம்மாக்களை நினைவுப்படுத்தி உருக வைக்கிறது."அந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பெய் மழை,இன்னிலை சொல்லுதே, என் காதலின் வானிலை" என்று வரிகள் அமைத்த பாடலாசிரியர் தாமரையின் பாடல் வரிகளை  பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை.கிரேட்!!!!
 
பாணா காத்தாடியை விட அதர்வாவோட நடிப்பு இதுல கம்மி தான்.ஆனா,நல்ல காதலனா நடிச்சிருக்காரு.அமலாபாலை பைத்தியமாவே காதலிப்பதாகட்டும்,பாடல்களின் டான்ஸ்,சண்டைக் காட்சிகள் அனைத்திலும் செம.ஆனால்,அதர்வாவின் குரலைக் கேக்கும்போது ஸ்பீக்கரை முழுங்கிட்டு பேசுறாரோன்னு தோணுது:)
 
அதர்வாவின் ஆழமான காதல்,ட்விஸ்ட்கள்,விறுவிறுப்பான கதை ஆகியவை படத்துக்கு ப்ளஸ்.அடிக்கடி வரும் பாடல் காட்சிகள்,சில இடங்களில் லாஜிக்கே இல்லாத காட்சியமைப்புகள்,அமலாபாலின் ஒட்டாத நடிப்பு இவையெல்லாம் படத்தின் மைனஸ்கள்.
 
இத்தனை மைனஸ்கள் இருந்தாலும் படம் முடியும்போது நம் மனம் பட்டாம் பூச்சியாய் பறந்து சந்தோசத்தில் சிறகடிப்பதை யாராலும் மறுக்க முடியாது.ஒரு அழகான காதல் கவிதையை ஃபோர் அடிக்காமல் 2 .30 மணி நேரம் சுவாரசியமாக நம்மை படிக்க வைத்த இயக்குனர் எல்ரெட் குமாருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!!!