27 நவம்பர், 2011

மயக்கம் என்ன - புகைப்பட மயக்கம்

தன்னுடைய ஒவ்வொருப் படத்திலும் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும், செல்வராகவனுக்கு முதலில் வாழ்த்துக்கள். ஏன்னா, 'மயக்கம் என்ன" படத்தை நெகட்டிவாக முடிக்காமால்  உணர்ச்சிபூர்வமாக நெகிழ்ச்சியோடு முடிய வைத்ததற்கு!!

மொக்கை பீஸைக் கூட அழகான தேவதைகளாக காட்டும் புகைப்படகாரர்களின், இரவுப் பகல் தாண்டிய உழைப்பையும், போராட்டங்களையும், பாதிப்புக்களையும் சொல்வது தான் மயக்கம் என்ன. ஆனால் புகைப்படக்காரனின் வலிகளை சரியாகச் சொல்லாமல், தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல் காட்டிவிட்டு, படம் முழுக்க காமத்தையும், காதலையுமே சொல்லி இருப்பது அலுப்பை ஏற்ப்படுத்துகிறது.

இரும்புப் புடிச்சக் கையும், சொரங்குப் புடிச்சக் கையும் சும்மாவே இருக்காது. அதுப் போலத்தான் எந்நேரமும் கேமராக் கையோடவே அலையும் தனுஷ், வித விதமான போட்டோக்கள் எடுத்து தன்னை நேச்சுரல் புகைப்படக்காரராக சேர்த்துக் கொள்ளும்படி பெரியப், பெரிய நிறுவனங்களாக ஏறி இறங்குகிறார். அது மாதிரி,ஒரு நிறுவனத்திற்கு வேலைக் கேட்டுச் செல்லும்போது, தனுஷ் எடுத்த போட்டோக்களை தான் எடுத்ததாக கூறி, உலக புகழ்ப் பெறுகிறார் பிரபலமாக இருக்கும் போட்டோகிராபர் ரவிசங்கர். தான் ஏமாற்றப் பட்டத்தை அறிந்த தனுஷ், அதன் பிறகு எடுக்கும் கிறுக்கலான முடிவுகளே மயக்கம் என்ன. செல்வராகவன் படத்துக்கே உரிய காதல், காமம், காமெடி, துரோகம் எல்லாத்தையும் காட்டியிருக்காகாங்க.

சில இடங்களில் தனுஷின் நடிப்பு யதார்த்தமாகவும், சில காட்சிகளில் நடிப்பே வராமல் திண்டாடி இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது. பாடல்களைத் தவிர படம் முழுக்க தனுஷ் முகத்தை பார்க்கவே சகிக்கல. எந்நேரமும் வெறுப்புடன்  சோர்வாக காட்டி படம் பார்ப்பவர்களையும் வெறுப்பேற்றுகிறார்கள். காஸ்டியூமிலும், முகத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


காதல் என்பது ஒருமுறை தான் வரும், ஒருத்தவங்க மேல தான் வரும்.ஒரு தடவை மட்டும் தான்  பூக்கும் என்ற விஜய் படம்,விக்கரமன் பட டயலாக் எல்லாத்தையும் உடைச்சி, காதல் அழகானது. எத்தனை முறை வேணாலும் வரலாம், பிடிச்சி இருந்தால் யார் மேலும் வரலாம், எந்த சூழ்நிலையிலும் வரலாம் என்று இப்படம் மூலம் யதார்த்த உண்மையை சொன்ன செல்வராகவனை நிச்சயமாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

தனுஷின் நண்பனின் காதலியாக வந்து, பின்னர் தனுஷையே காதலித்து திருமணம் செய்யும் ஹீரோயின் ரிச்சா முன் பாதியில் வெறும் காமப் பொம்மையா வந்து, பின் பாதியில் தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து பின்னி எடுத்திருக்காங்க. ரிச்சா நடிக்கத் தெரிந்த சிறந்த நடிகை என்று, அவங்க முகப் பாவனைகளே சொல்லாமல் சொல்கிறது. தன்னுடைய பட ஹீரோயின்களை  எப்பொழுதும் காமப் பார்வையோடு கண்ணை உருட்டி பார்த்து, சோகமாக காட்டுவதுப் போலவே ரிச்சாவையும் படம் முழுக்க சோகமாவே காட்டி இருக்காரு செல்வராகவன். மொக்கையா இருக்குற பெண்களையும் பேரழகியா காட்டுவது கெளதம் மேனன் ஸ்டைல். பேரழகியையும் மொக்கை பீஸா, அழு மூஞ்சியாக் காட்டுவது செல்வராகவன் ஸ்டைல்.


படத்தோட நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் ராம்ஜி தான். கண்களிடமும்,கேமராவிடமும் வேலை வாங்கத் தெரிந்தவன்  தான் சிறந்த ஒளிப்பதிவாளன். தன்னை சிறந்த ஒளிப்பதிவாளர் என்று நிருபிச்சிருக்காரு ராம்ஜி. சிறுப்  புல்லும், ஒற்றைப் பனித்துளியையும் புகைப்படக்காரர்கள் கொண்டாடும்  இயற்கையின் வரப் பிரசாதங்கள். இயற்கையின் அழகையும், அவற்றின் உயிர்த் துடிப்புக்களான பறவைகளையும், அதிசய விலங்குகளையும் படத்தின் இடையிடையே ,அழகாகக்  காட்டி நம்மை பிரமிக்க வைத்துள்ளார்.

படத்தின் பெரிய பலம் பாடல்களும், பின்னணி இசையும் தான்.ஜி.வி பிரகாஷ் பின்னி எடுத்திருக்காரு. பொதுவாக படம் வெளியாவதற்கு முன் பாடல் ஹிட் ஆகிவிட்டால், பாடல் படத்தில் எப்படி இருக்குமோ என்று பெரிய எதிர்ப்பாபோடு, அதற்காகவே போய்ப் படம் பார்ப்போம். ஆனால் பலப் பாடல்களின் காட்சியமைப்புகள் சம்மந்தமே இல்லாமல்,நம் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி ஏமாற்றத்தை கொடுக்கும். ஆனால் இந்தப் படத்தில் வோட, வோட பாடல் காட்சியமைப்பு சான்சே இல்லை. நாம் எதிர்ப்பார்த்ததை விட 100 மடங்கு சூப்பரோ, சூப்பர். எத்தனை முறை வேணாலும் பார்க்க வைத்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. மயக்கம் என்ன  படம் வெளியாவதற்கு முன் இளைஞர்கள் மத்தியில் இது, ஒருக் காதல் தோல்விப் படம் என்று உணரவைத்தது "காதல் என் காதல், அது கண்ணீருல" பாடல். இந்தப் பாட்டு அந்தப் படத்துக்கு தேவையே இல்லாதப் பாட்டு. தேவையான இடத்துலும் இந்தப் பாட்டை வைக்கல.வேஸ்ட். "நான் சொன்னதும் மழை வந்துச்சாப்' பாட்டு இந்த மழைநாளில் கேட்டுக் கொண்டே மழையை ரசிக்கும் ரகம்.

பெண் என்பவள் நேரில் வாழும் கடவுள் என்று காலம் எவ்வளவு முன்னேறினாலும், எந்த இயக்குனர்களும் காட்ட முன்வருவதில்லை, ஏன்னா, படம் ஓடாது, பசங்களுக்கு பிடிக்காது என்கிற மாயை. இதை அப்படியே செஞ்சிருக்காரு செல்வராகவன். போதைப் பொருளாகவே சித்தரித்து, தன்னுடைய அருவருக்கத்தக்க வசனங்களால், தகாத வார்த்தைகளால் திட்டியும், வெட்றா அவள, குத்துடா அவள என்று பாடலையும் வைத்து பெண்களை இழிவுப் படுத்திருக்கார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். 


வியட்நாம் போரின்போது தீப்புண் காயம்பட்டு அழுதுகொண்டே நிர்வாணமாக
  ஓடிவந்த சிறுமியை நிட் உக் என்ற புகைப்படக்காரர் வெளியுலகத்திற்கு படம் எடுத்துக் காட்டியதால் தான், மக்களுக்குப் போரின் மீது  கசப்புணர்வும், விழிப்புணர்வும் ஏற்ப்பட்டது. சூடான் நாட்டில்  ஒரு குழந்தை எலும்புகள் தெரிய இருப்பதையும், அந்தக் குழந்தையை கழுகு ஒன்று தின்னக் காத்திருப்பதையும் படமாக எடுத்தப் புகைப்படக்காரர் கெவின் கார்ட்டர் மூலம் தான் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வறுமை பெரிதளவில் மக்களிடையேயும், உலக நாடுகளாலும் பேசப்பட்டது.புகைப்படக்காரர்களால் அனைத்தையும் வெளிக்கொணர முடியும். ஆனால் புகைப்படம் பற்றிக் கதையமைத்துவிட்டு, அதுப் பற்றி அழுத்தமான காட்சிகளைப் பதிவு செய்யாமல், சம்மந்தமில்லாத திடீர், திடிரென  வரும்  காட்சியமைப்புகள் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

மாடியிலிருந்து கீழே விழுந்தால் நிச்சயம் இறப்பார்கள், இல்லையென்றால் அடிப்படும். ஆனால், தான் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சியினால் அவ்வளவுப் பெரிய   மாடியிலிருந்து கீழே விழுந்த தனுஷ் அடியேதும் படாமல் இருப்பது லாஜிக் மீறல். படம் முழுக்க சாக்கடைப் போன்ற டபுள் மீனிங் வசனங்களால் காது கொடுத்து கேட்க முடிவதில்லை. படத்துல மதுப் பாட்டில்கள் தான் நம்மக்கூட பயணம் செய்யுது. எல்லா இடத்திலும் வர மது தான், படம் பார்க்கும் ஆண்களின் கவனத்தை ஈர்க்கும்.

இரவை மணிரத்தினத்திற்கு அடுத்து அழகா காட்டத் தெரியும் கலை செல்வராகவனுக்கு மட்டும் தான் தெரியும் போல. இரவையும், தனிமையும் அழகாக் காட்டி இருக்காரு. மொத்ததுல இந்தப் படம் புகைப்படத் துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு, ஒரு சின்ன டானிக் குடிச்ச சந்தோசம் மாதிரி தான். பெண்களை இழிவுப் படுத்துற வசனங்கள் இருப்பதால் ஆண்களுக்கும் மயக்கம் என்ன  பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு? செல்வராகவனின் அடுத்தப் படத்திற்கு போனால், நிச்சயமாக நான் பஞ்சு எடுத்துட்டுப் போவேன்.

மொத்தத்தில் மயக்கம் என்ன - புகைப்பட மயக்கம்

21 அக்டோபர், 2011

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்!

சட்டமன்றம், நாடாளமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தரக் கூடாது என்று பல அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கும் நம் நாட்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள, நாட்டார்மங்கலம் கிராம மக்கள் உள்ளாட்சித்  தேர்தலில் தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்துப் பதவிகளையும் பெண்களுக்கு மட்டுமே வழங்கி 100 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பென்றால் அத்தனை பெண்களும் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள்!!!
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
"காட்டுமன்னார்கோவில் தொகுதியிலேயே மிகப் பெரிய கிராமம் என்ற சிறப்பும், அதிக மக்கள் தொகைக் கொண்ட கிராமம் என்ற பெருமையும், எங்க ஊருக்கு மட்டும் தான் உண்டு. 2500 குடும்பங்கள் வசித்து வரும் இங்கு, தலித், வன்னியர், பிள்ளைமார், முதலியார் போன்ற அனைத்து சாதி மக்களும் வசித்து வருகிறோம். எப்பொழுதுமே எனக்கு சாதி, மதத்தின் மீது நம்பிக்கை கிடையாது. கிராம மக்கள் அனைவரும் நீங்க தான் ஊராட்சி மன்றத் தலைவி பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைத்தார்கள். நான் அவர்களிடம் நம் கிராமத்தை முன்னேற்ற வேண்டுமென்றால் வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் பெண்களாக போட்டியிட வைக்க வேண்டுமென்றும், கிராமத்தை இந்தியாவிலேயே முன்மாதிரியாக மாற்ற எல்லோரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்ற  இரண்டுக் கோரிக்கைகளை வைத்து, இதற்கு சம்மதித்தால் தான், நான் தேர்தலில் நிற்பேன் என்று கூறினேன். இதைக் கேட்டக் கிராம மக்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டனர். தலித் மக்கள் வாழும் பகுதியில் 5 வார்டுகளும், முதலியார்கள் பகுதியில் 3 வார்டுகளும், வன்னியர், பிள்ளைமார்  இருக்கும் பகுதிகளில் 1 வார்டும் உள்ளது. இந்த வார்டுகளில் இருந்து ஆளுமைத் திறன் கொண்டப் பெண்களாகப் பார்த்து மக்களே தேர்ந்தெடுத்தனர். இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, மாறாக, வரவேற்றார்கள். பின்னர் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் முன் சாதி, மதம் பார்க்காமல் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலனிற்கும் பாடுபடுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு, ஒரு  நல்ல நாளில் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தோம். எங்களுக்கு எதிராக யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அனைவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டோம் என்று சொல்லும் ஊராட்சிமன்றத் தலைவி சுதா மணிரத்தனம் "ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்புகள் அதிகமாக குவிந்துக் கிடக்கிறது. அதை வரவேற்க தகுதி இருந்தும் ஒதுக்கிவிடும் பெண்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது என்றும் வருத்தமான குரலில் சொன்னார்.

"
கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான குடித்தண்ணீர், மருத்துவ வசதி, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி என்று சொல்லிக் கொள்ளும்படி எதையும் செய்து தரவில்லை. கிராமத்தின் நிலை மோசமாக இருந்ததால், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எங்கள் கிராமத்தைப் பற்றி கேலியாகப் பேசி சிரிப்பார்கள். இதனால், பெருத்த அவமானம் அடைந்த நாங்கள், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியதைத் தொடந்து 6 மாதத்திற்கு முன்னரே, ஊரில் உள்ள அனைத்து சாதி மக்களையும் சிவன் கோவில் அருகே, ஒன்றுத் திரட்டி கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டினோம். அரசியல் கட்சிகளை சார்ந்து போட்டியிட்டால், வெற்றிப் பெற்றக்  கட்சிக்காரர்கள் மட்டுமே அதிக பலனை அனுபவிப்பார்கள் என்று சுயேட்ச்சைகளாக நிறுத்த முடிவு செய்தோம். ஒருத் தலைமை, ஒரே சொல், ஜாதி, மதம் இல்லாமல் ஒரேக் கட்டுப்பாட்டின் கீழ் அனைவரும் இருக்கவேண்டுமென்று சபதம் எடுத்தோம். பின்னர் யாரை ஊராட்சி மன்றத் தலைவியாக நிறுத்தலாம் என்று எங்களுக்கு கேள்வி எழுந்தப்போது அனைவரின் கண் முன்னும் வந்தவர், எங்களின் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவி சுதா மணிரத்னம் தான். ஏனென்றால் அவர் எம்., பி.எட் படித்தவர். ஊரில் அதிகப் படிப்புப் படித்த பெண்மணி என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பல ஆண்டுகள் பணியாற்றி விட்டு, சமூக சேவை செய்வதற்காக தன்னுடைய வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து வி.ஆர்.எஸ் வாங்கிவிட்டார். பின்னர் ஊரில்  உள்ள ஏழை  மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் எடுத்தும், 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவகளை ஊக்கப்படுத்தி கல்வி உதவித் தொகையும் வழங்கி வந்தார். அதுமட்டுமில்லாமல், எந்த சாதியினராக இருந்தாலும், அவர்களது வீட்டில் யாரவது இறந்துவிட்டால் முதல் ஆளாகச் சென்று உறவினர் போல் துக்கம் விசாரிக்கும் அவரது நல்ல குணத்தையும் நாங்கள் அறிவோம். கிராம மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் சுதா அம்மாவிடம் தான் செல்வோம். அவரும் முகம் சுளிக்காமல் அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். ஊராட்சிமன்றத் தலைவி முடிவானப் பிறகு, மீதமுள்ள  9 வார்டுகளுக்கு பெண் கவுன்சிலர்களை அனைத்து சாதியிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். விவசாயக் கூலிகளான, அவர்கள் அனைவருமே 8 -ம் வகுப்புக்கு மேல் படித்த தன்னம்பிக்கை நிறைந்த மனுஷிகள். களை வெட்டுதல், நடவு வேலை, சித்தாள் வேலை செய்தல் என்று அனைத்து வேலைகளையும் செய்வார்கள். பெண்களாக தேர்ந்தெடுக்கப்பட்டத்தை நினைத்து, கிராம ஆண்கள் பெருமைப்படுக்றோம். இப்பெண்களின் மூலம் கிராமத்திற்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று வார்த்தைகளில் நம்பிக்கைத் தெறிக்க நம்மிடம் பேசினார் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்"
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
"தீபா, முத்துலட்சுமி, லட்சிய வீரமணி, அஞ்சலை தேவி, கண்ணகி, ராதா, தமிழரசி, வேம்பு, விசாலாட்சி ஆகிய 9 பேரும் கவுன்சிலர் உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளோம். எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அனைவரும் பெண் என்பதால், பணி செய்ய எவ்விதப் பிரச்சனையும் இருக்காது. ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து மக்கள் பணி செய்வோம். இந்த ஊரில் மக்கள் பிரச்சனை என்ற சொல்லுக்கே இடம் அளிக்காத வகையில், சிறப்பாக பணி செய்து, தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக எங்கள் கிராமத்தை மாற்றிக் காட்டுவோம். இதற்காக, அரசு புறம்போக்கு இடத்தை முறையாக பயன்படுத்துதல், கூரையில்லா வீடு, வீடுகளுக்கு கழிப்பறை வசதி, இளைஞர்களுக்கு விளையாடவும், உடற்ப்பயிற்சி செய்யவும் மைதானம் அமைத்தல், மருத்துவமனையை ஒழுங்குப்படுத்துதல், ஊரில் உள்ள 10 ,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி தனி வகுப்பு எடுத்தல், மின்சாரம், குடிநீர் தேவை, சாலை வசதிகள் நிறைவேற்றுதல், கிராமத்திலேயே வேலை வாய்ப்புக்களை உருவாக்கி அனைவரையும் சுயமாக சம்பாதிக்க வைத்து பொருளாதாரத்தில் முன்னேற்ற வைப்போம் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். நிச்சயமாக வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு நிறைவேற்றுவோம். நாங்கள் அனைவரும் பெண்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அருகில் உள்ள மற்றக் கிராமத்தினர், எங்களைப் பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்து பாராட்டுவதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. எங்களைப் போல் மற்றக் கிராமத்தினரும் பின்ப்பற்றி, பெண்களுக்கு வாய்ப்பு அளித்தால் நிச்சயம் சாதித்துக் காட்டுவார்கள் என்று உறுதியானக் குரலில் நம்மிடம் பேசினார் வார்டு உறுப்பினர் தமிழரசி.
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
 ஆண்கள் செய்யும் வேலைகளை பெண்கள் பங்குப் போட்டுக் கொண்டதால் வருமானம் பெருகியதோ இல்லையோ, பல புதிய வாய்ப்புகள் மட்டும் பெருகியது மட்டும் நிஜம். அதற்கு சாட்சியாக வாழ்கிறார்கள் நாட்டார் மங்கலம் கிராம பெண்கள்.
 

அன்புடன்,
பூ. சர்பனா.

30 செப்டம்பர், 2011

"வாகை சூட வா" திரை விமர்சனம்

ஒவ்வொரு செங்கற்களாய் சேர்த்து ரசித்துக் கட்டப்பட்ட வீடு போலத்தான் உள்ளது "வாகை சூட வா" திரைப்படம். நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. எங்கோ நடந்து முடிந்த ஒருப் பதிவை நமக்குப் படம் பிடித்துக் காட்டி, நம் மனதை களவாடிய களவாணி இயக்குனரின் அடுத்த பிரமிப்பு தான் "வாகை சூட வா".



"இளமையில் கல், அது செங்கல் சூளையின் கல் அல்ல" என்ற ஒரு நல்ல கருத்தைக் மொத்த டீமும் பதிவு செய்துள்ளனர். இப்படம் ஒரு பீரியட் படம் என்பதால் பார்த்துப், பார்த்து அழகான காவியமாக ரசிக்கும்படி செதுக்கியுள்ளார்கள். படத்தின் கதைக்கான களம் இதுவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் கை வைக்காத செங்கல் சூளையில் வாழும் மக்களைப் பற்றி என்தால், இயக்குனர் சற்குணம் பாராட்டப்பட வேண்டியவர்.

கிராம சேவா அமைப்பு மூலம் படிப்பறிவில்லாத கிராமத்தில் ஆசிரியராக வேலை செய்தால், அதனால் கிடைக்கும் சான்றிதழ் மூலம் ஈசியாக அரசு வேலைக் கிடைத்துவிடும், என்கிற கனவோடு 'கண்டெடுத்தான் காடு" கிராம மக்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வருகிறார் ஆசிரியர் விமல்.அங்குள்ள மக்கள் படிப்பறிவில்லாமல் செங்கல் சூளையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். கல்வியின் பெருமைத் தெரியாத கிராமவாசிகள், அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி சொல்லிக் தரக்கூடாது என்று எதிர்க்கும் செங்கல் சூளை அதிபர் பொன் வண்ணன், இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் விமல், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுத்தாரா, இல்லையா? அவருக்கு அரசு வேலை கிடைத்ததா? இல்லையா எனபது தான் கதை. படம் பார்ப்பவர்களை சலிப்படையச் செய்யாமல் சிரிக்க வைத்து, ரசிக்க வைப்பதில் பல பட்டப் படிப்புக்கள் படித்திருப்பார் போல இயக்குனர் சற்குணம்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பாராட்டுக்குரியவர். செங்கல் சூளையில் வாழும் மக்கள் படும் துயரங்களையும், புழுதிக் காற்றும், பொக்கை விழுந்த கிராமத்து மனிதர்களையும், மண்ணிற்கும், மனிதனுக்கும் உள்ள உறவை மண் மனம் மாறாமல் வளைத்து வளைத்துப் படம் பிடித்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.



இப்படத்தின் நிஜ ஹீரோக்கள் கல்வி கற்காமல் செங்கல் சூளையில் வேலை செய்யும் சிறுவர்கள் தான்.ஒவ்வொரு குழந்தைகளும் விமல் படிக்கச் சொல்லி அழைப்பாரோ என்று பயந்துக் கொண்டு ஓடி, நம்மை சிரிக்க வைத்தும், பின்னர் படிப்பின் அருமையை உணர்ந்து ஆர்வமாக கற்று, தன் அம்மாவிற்கு சிலேட்டில் கையெழுத்துப் போடக் சொல்லிக் கொடுத்து, அதை விமலிடம் எடுத்து வந்து காட்டும்போதும் நம்மை உருக வைத்து, கைதட்டல்களைப் பெறுகிறார்கள். படத்தில் சுவாரசியம் கூட்டி, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பொறுப்பும் இந்த சிறுவர்களிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இதில் நடித்துள்ளவர்களில் ஒரு சிலர் மட்டுமே நமக்கு ஏற்கனவே அறிமுகமான முகங்கள். மற்ற அனைவரும் புதுமுகங்கள். ஒவ்வொருவரும் மிகையில்லாமல் தங்கள் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள். இந்த புது முகங்களைப் பார்க்கும்போது திறமையான இவர்கள், இத்தனை நாள் எங்கு மறைந்திருந்தார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. சின்னச் சின்ன நிகழ்வுகளை, சின்னப் பிள்ளைகளோடு சேர்த்து விளையாடி இருப்பாரோ சற்குணம், அத்தனை சின்னப் பிள்ளைகளின் காட்சி அமைப்புகள் அழகு கவிதைகளாக செதுக்கி இருக்கிறார்.

விமல் நடிப்பு யதார்த்தம் தான், ஆனால் பத்தவில்லை. எங்கு கண்டுப் பிடித்தார்கள் இந்த தமிழ்ப்பெண்ணை என்று மனம் கேட்கச் சொல்லுகிறது. ஹீரோயின் இனியாவை பார்க்கும் போது. எத்தனை, எத்தனை முகப்பாவனைகள் அத்தனையும் இனியாவுக்கே சொந்தமா? படம் பார்ப்பவர்களை நினைக்க வைக்கிறார். க்யூட்



இக்காலத்து நகரத்துப் பிள்ளைகள் அறியும் வகையில், அவர்கள் பார்த்திடாத, கேட்டிடாத நத்தை, தும்பி, உடும்பு, மொடக்கத்தான் தழை, எருக்கம் பூ, கருப்பட்டி, அம்மி, ஆந்தை,கு ளத்து மீன்கள் என்று அத்தனையும் இப்படத்தில் அழகாக நாம் பார்த்து ரசிக்கும்படி பதிவு செய்துள்ளார் சற்குணம். படம் பார்ப்பவர்களையும் அவைகளுடனேயே 2 .30 மணி நேரம் சேர்ந்து வாழ வைத்துள்ளார். இனிமையான புது அனுபவம் நமக்கு ஏற்படுவதை நிச்சயமாக தவிர்க்க முடியாது.

"பிள்ளைகள் படிக்க வராததால், பாடம் நடத்தாமலேயே சம்பளம் வாங்கும் விமலைப் பார்த்து குருவிக்காரராக வரும் வயதான முதியவர் "நீ விதைக்கல, ஆனா அறுக்கற" என்று பேசும் வசனம் நம் கவனத்தை பெரிதும் ஈர்த்து கைதட்டல்களைப் பெற வைக்கிறது.இந்த வசனம் உலகில் உழைக்காமல் மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு செருப்படி. படத்தில் மிகவும் ஈர்த்த வசனமும் இது தான். மேலும் கிராம மக்கள் லாரியை ராலி என்றும், ரேடியோவை லேடியோ என்று அழைக்கும்போதும்,ரேடியோவில் பாடல்களைக் கேட்டுவிட்டு மனிதன் அதுக்குள்ளே இருந்து பாடுறான், நாம அடிச்சா செத்துப் போய்டுவான் என்று வெள்ளந்தியாகக் கூறும்போதும் ரசிக்க வைக்கிறார்கள்.

நல்ல திறமையான நடிகர் பொன்வண்ணன். ஏனோ சற்குணம் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. இரண்டு சீன்ல மட்டும் கெஸ்ட் ரோலா வந்துட்டுப் போறாரு பாக்கியராஜ். படத்தின் மிகப்பெரியப் பலம் இசை தான். இது ஒரு பீரியட் படம் என்பதால் இசையமைப்பாளர் கிப்ரான், பின்னணி இசையை பக்குவமாக கையாண்டு, படத்திற்கு தகுந்த மாதிரி இசையமைத்து நம் காதுகளை இனிமையாக்குகிறார். "போறானே போறானே" பாடல் சான்சே இல்லை. எப்பொழுதும் கேட்டுக்கொண்டே முனுமுனுக்க வைக்கும் ரகம். போறானே பாடல் கேட்க இனிமை என்றால், மற்றொரு பாடலான "சாரக் காத்து" பாடலோ பார்ப்பதற்கு கொள்ளை அழகு. அப்பாடல் நம் கண்களுக்கு விருந்தளித்ததுப் போல் இருக்கும். பாடல்களைப் பார்க்கும்போது, அவரவர் சிறு வயது நினைவுகளும்,கிராமத்தில் வாழ்ந்த அழகான நாட்களும் கண்முன்னே விரியத் தொடங்கி விடும். அவ்வளவு கொள்ளை அழகாகப் பாடல்களைப் படமாக்கியுள்ளார்கள்.

ஒன்று மட்டும் புரியவில்லை தமிழகத்தில் எந்த மூலையிலும் கிடைக்கும் விளாங்காயை சாப்பிட்டு விட்டு விஷக்காய், என்று விமல் பதறும் போது, ஒரு வாத்தியாருக்கு படித்த மனிதனுக்கு விளாங்காய் தெரியாதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த ஜோடிக்கப்பட்ட காட்சியமைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொட்டுக் கொள்ள ஊறுகாயும் இல்லை.விட்டுக் கொடுக்க கற்பனையும் இல்லை. ஆக மொத்தம் வாகை சூட வா கவனிக்கப் படாத செங்கல் சூளையில் வேலை செய்யும் மனிதர்களின் வாழ்க்கை பற்றியப் படைப்பு. காலம் கடந்து விட்டது சற்குணம் சார், இப்படத்தில் இன்னும் நிறைய சேர்த்து இருக்கலாம். கோர்வை இல்லாமல் செல்லும் கதையில் ஒரு சின்ன சந்தோசம், விமல் மேல் இனியா வைக்கும் காதல் மட்டுமே.  




செங்கல் சூளைகளில் இன்றும் பல மக்கள் படிப்பறிவில்லாததால் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இது ஒரு விழிப்புணர்வுப் படம் என்பதால் அனைவரும் பார்க்க வேண்டியப் படம்.

மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள வாழ்வியலை அழகாகப் பதிவு செய்ததற்காக சற்குணத்திற்கு வாழ்த்துக்கள் !!!