27 மார்ச், 2012

எங்கெங்கு காணினும் சக்தியடா... சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தளிஞ்சி கிராமம்


செல்வதற்குப் பாதையில்லாத மலைவாழ் கிராமம் ஒன்றில் முழுக்க முழுக்க சோலார் பவரில் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார்கள். தவிர, சாண எரிவாயுவிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

கிட்டதட்ட எழுபது  டிகிரி கோணத்தில் பச்சை பசேல் என்று நெகுநெகுவென்று வளர்ந்து கம்பீரமாக வரவேற்கிறது மூணார் மலை. நமது பயணம் அங்குள்ள தளிஞ்சி என்கிற மலைவாழ் மக்கள் கிராமத்துக்கு. அங்கு என்னதான் சிறப்பு?

இந்தக் கிராமத்துக்கு மின்சாரம் கிடைப்பது முழுக்க முழுக்க சோலார் சக்தியில்தான். இது தவிர, சாண எரிவாயுவில் இருந்தும் இவர்கள் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் அட என்று வியந்தோம்.  
இந்தக் கிராமம் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்றோம். வழியில்,யானைகள் தாக்கும் அபாயம் இருந்ததால் அவரே இரண்டு பாதுகாவலர்களை நம்முடன் அனுப்பி வைத்தார். மலையில் பல்வேறு வன விலங்குகள் வாழ்வதால் வாகனங்களுக்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் நடைராஜா பயணம்தான்.



திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து, மூணார் செல்லும் பேருந்தில் பயணித்தால்  22  கிலோ மீட்டர் தொலைவில் வருகிறது கேரளாவின் சம்பக்காடு. அங்கு இறங்கிக் கொண்டு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக கரடு முரடான பாதையில் 7 கிலோ மீட்டர் நடைபயணம்.   5  நிமிடம்தான் நடந்திருப்போம். சலசலவென்று வாயாடிக் கொண்டு குளிர்ச்சியாக நதி ஒன்று குறுக்கிடுகிறது. கண்களால் நதியில் நனைந்தவாறே பாலத்தில் ஏறி நதியைக் கடந்தோம். அதன்பிறகு பாதையே கிடையாது.  

அடர்ந்த மரங்கள் பிரம்மாண்ட கூடாரமாய் விரிந்து பகலில் ஓர் இரவாய் மயக்கம் காட்டிக் கொண்டிருந்தனஅடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே தனது கதிர்களை நுழைக்கப் போராடிக் கொண்டிருந்தது சூரியன். ஆனால், பாவம், அதற்குத் தோல்விதான். வழியில் தலையிலும் முதுகிலும் பெரிய,பெரிய மூட்டைகளை சுமந்து கொண்டு ஆண்களும், பெணகளும் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.சிறிது தூரம் நடந்திருப்போம். ‘உய்ங்ங்...’ என்று ஒரு ரீங்காரம். இது வரை நாம் பார்த்திராத ஒரு தினுசான கொஞ்சம் பெரிய சைஸ் வண்டு. நடுங்கி அப்படியே நின்றோம். நம்மைச் சுற்றிப் பறந்து சிறிது நேரம் சங்கீதக் கச்சேரி நடத்திய அந்த வண்டு பிறகு, வேறெங்கோ பறந்தது. தொடர்ந்து நடக்கத் தொடகினோம். வழியில்  மேலும் பலவித வண்டுகள், விநோதப் பூச்சிகள் நடுநடுவே திடீரென்று குறுக்கிட்டு திகிலூட்டின.   7 கிலோ மீட்டர் நடைபயணத்துக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டு வீடுகள் தென்பட்டனஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது, கும்பலாக உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு செய்தி சேனல். ‘அட’  

அங்கிருந்த மல்லிகா என்கிற பெண் நம்மிடம் பேசத் தொடங்கினார்.,  "200 வருஷங்களுக்கு முன்னாடிலேர்ந்தே பரம்பரை  பரம்பரையா இந்தக் கிராமத்தில் இருக்கோம். ஃபாரஸ்ட்  அதிகாரிங்க, எங்க கிராம மக்களுக்குன்னு 800 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்காங்க, அதுலதான் 150 குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். வீடு கட்டுன இடம் போக மீதி இடத்துல மலையை  சரிசெய்து அதில் பீன்ஸ், காய்கறிகள், நெல் பயிரிட்டு விவசாயம் செய்றோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக 4 ஏக்கர் வரை நிலம் உள்ளது” என்று சொல்லிக் கொண்டே வந்தவரிடம் சோலார் மின்சாரம் பற்றிக் கேட்டோம். உற்சாகமாக் கூறத் தொடங்கினார் 

காலங்காலமா எங்க கிராமம் இருளில்தான் மூழ்கிக் கிடந்தது. எல்லா வீடுகளிலும் மண்ணெண்ணெய் விளக்குத்தான். பிள்ளைகளும் அந்த வெளிச்சத்தில்தான் ரொம்ப  சிரமத்தோடு படிப்பார்கள்ஊரில் ரேஷன் கடை இல்லாததால் 7 கிமீ தொலைவில் உள்ள சின்னார் பஞ்சாயத்தில் போய் மண்ணெண்ணெய் வாங்கி வருவோம், அதுவும் கொஞ்ச நாளில் தீர்ந்துடும். அந்த மாதிரி நேரங்கள்ல  வாசல்ல தீ மூட்டி பிள்ளைகளைப்  படிக்க வைப்போம்அரசு அதிகாரிகளிடம், எங்கள் குறையைச் சொல்லி  பலமுறை மின்சார வசதி செய்துத் தரச் சொல்லிக் கேட்டோம். இங்கு  பல அரிய வகை உயிரினங்கள் வசிப்பதால்,அவைகளுக்கு பாதிப்பு ஏற்ப்படும் என்று மின்சார வசதி செய்து தரலை. இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்தைப் பார்வையிட்டு, சூரிய ஒளியில் இயங்கும் சோலார் விளக்குகளைப் பொருத்துவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதன்படியே ஒவ்வொரு வீட்டிற்கும் சோலார் விளக்குகளை அமைத்துக் கொடுத்தனர்” என்றார்


அடுத்து கிராமத்தின் மூப்பர் (ஊர்த் தலைவர்) ராஜனைச் சந்தித்தோம். "நாங்கள் டவுனுக்குச் செல்லணும்னா 7 கிலோ மீட்டர் கரடு, முரடான வழியில்தான் செல்லணும்வெளி ஆட்கள் இங்கு வந்தால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று, அரசு பாதை அமைக்கலை. நாங்களாவது பரவாயில்லை. மஞ்சம்பட்டி, புதுவயல், மூதுவார்குடி, மூங்கில் பள்ளம் போன்ற கிராமங்கள் 13 கிமீ தொலைவில் உள்ளன. இங்கு வாழும் மக்களும்  நடந்து வந்து, எங்கள் கிராமத்தை தாண்டிதான் டவுனுக்குச் செல்வார்கள். காலை 10 மணிக்குமேல் வெளியில் சென்று மாலை 5 மணிக்குள் வீடு திரும்பி விடுவோம். ஏனென்றால் போகும் வழியில் யானைகள் எப்போ  வேணாலும் குறுக்கே வரும். ஒருமுறை எங்கள் ஊரைச் சேர்ந்த காளியாத்தாள் என்ற பெண் விறகு பொறுக்கச் செல்லும்போது யானை மிதித்து இறந்துவிட்டார். அதிலேர்ந்து ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோம். எங்கள் மூதாதையர்கள் காலத்திலிருந்தே,இன்றுவரை கைக்குத்தல் அரிசிச் சோறுதான் சாப்பிடுகிறோம். அதனால் உடம்புக்கு முடியலைன்னு படுத்தில்லை...” என்கிறார் பெருமையுடன். பின்னர் அவர் நம்மை டீ சாப்பிடும்படி அன்பு வேண்டுகோள் வைத்தார். டீ வந்தது. மூலிகை கலந்த கக்கன் டீ. தாவர வாசனையும் சூப்பர் டேஸ்ட்
மேல் நாவில் டீயின் சுவை மிதந்திருக்க அங்கிருந்து நகர்ந்தோம். கர்னாத்தா என்பவரின் வீட்டுக்குப் போனோம். அவர் நம்மிடம் பேசத் தொடங்கினார். "எங்கள் கிராமத்துக்கு 2001 -ம் ஆண்டுதான்   பள்ளிக்கூடம் வந்ததுஇங்குள்ள பள்ளியில் 5 ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், குழந்தைகள் மேற்படிப்பை உடுமலையில் உள்ள பள்ளியில் ஹாஸ்டலில்  படித்து வருகிறார்கள். நாங்கள்தான் படிக்கலை. எங்கள் குழந்தைகளாவது படிக்கட்டுமே என்ற வைராக்கியத்தோடு படிக்க வைக்கிறோம். முன்பெல்லாம் இரவில் சரியாக வெளிச்சம் இல்லாததால் குழந்தைகள் படிக்கச் சிரமமாக இருக்கும். மின் வெளிச்சமே அறியாத எங்கள் ஊரில், சோலார் விளக்குகள் அமைந்ததால், தற்போது குழந்தைகள் மின் வெளிச்சத்தில் ஆர்வமாக அதிக நேரம்  படிப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமா இருக்கு.  

எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க எங்களுடனேயே தங்கி கல்வி சொல்லித்தரும் ஆசிரியர் மணி அவர்களுக்கு, எங்கள் கிராமமே கடமைப்பட்டுள்ளது. வாரம் 5 நாட்களும் இங்கேயே தங்கி பாடம் நடத்திட்டு, வார இறுதியில் ஒருமுறை மட்டுமே அவரது வீட்டிற்குச் செல்லும் மணி சார் எங்களுக்குக் கிடைத்த தெய்வமாக நினைக்கிறோம். இங்குள்ள ஆற்றுத் தண்ணீரில் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து  பைப் மூலம் தண்ணீர் எடுத்து நீரை சுத்திகரித்துக் குடிக்கிறோம். ஒவ்வொரு வீட்டிற்கு 2 பல்ப்பும், அனைத்து தெருவிற்கும் விளக்குகளும் அமைத்துக் கொடுத்துள்ளனர்



சூரிய வெளிச்சம் இருக்கும்போது மட்டும்தான், மின்சாரம் கிடைக்கும். இது காட்டுப் பகுதியாக இருப்பதால் இங்கு அடிக்கடி மழை பெய்யும். அப்பொழுதெல்லாம் மின்சாரம் இல்லாமல் இருட்டில்தான் பொழுதைக் கழிப்போம். இதனால் சூரிய வெளிச்சம் கிடைக்காத காலத்தில் நாங்கள் வளர்த்துவரும் ஆடு, மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து, சாண எரிவாயு மூலமாகவும் மின்சாரம் தயாரிக்கிறோம். தற்போது முழுமையாக எங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது”  என்று சொல்லிக் கொண்டே நம்மிடம் வீட்டில் உள்ள விளக்கைப் போட்டு  காட்டினார்  கர்னாத்தா. மதிய சாப்பாட்டை அங்கேயே முடித்துக் கொண்டோம். கேழ்வரகு கூழும், ,பெயர் தெரியாத விதவிதமான பழங்களையும் சாப்பிட கொடுத்தார்கள். வாழ்க்கையில் இதற்கு முன் அப்படி ஒரு சுவையான உணவை உண்டதில்லை என்று உறுதியாகக் கூறலாம்இங்குள்ள அனைவரின் வீடுகளிலும் டிவியும், டிடிஹெச் ஆண்டனாவும் உள்ளது. தவிர, விவசாயம் செய்யும் நிலங்களில் அடிக்கடி பன்றிகளும், யானைகளும் வந்து அட்டகாசம் செய்வதால், நிலங்களைச் சுற்றி சோலார் சக்தி மூலம் மின் வேலிகள் அமைத்துள்ளார்கள்.. அதேபோல்  கிராமத்தின் பாதுகாப்புக்காகவும் ,ஊரைச் சுற்றிலும் மின் வேலிகள் அமைத்துள்ளார்கள். நகரத்து வாசனையே படாத இந்தக் கிராமத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், திருமணத்தின்போது குண்டுமணி அளவு கூட தங்கமோ, வரதட்சணையோ ஆண்கள் வாங்குவதில்லை. தவிர திருமணத்தின் அனைத்துச் செலவுகளையும் மாப்பிள்ளை வீட்டாரேஏற்றுக் கொள்கிறார்கள்.  

மக்கள் இங்கு குடியிருப்பது வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இவர்களை பல முறை அரசு அதிகாரிகள் நேரில் சென்று, “ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் தருகிறோம். நகரத்திற்குச் சென்றுவிடுங்கள்” என்று கூறியும்,இயற்கை வாழ்க்கையை இவர்கள் நேசிப்பதால் டவுனுக்குச் சென்று குடியேற மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள். இவர்களுக்கு வெளியூரில் சொந்த பந்தங்கள் என்று யாரும் இல்லை. இதே ஊரிலேயே பெண் எடுத்து, பெண் கொடுத்துக் கொள்கிறார்கள். மேலும்  6 குதிரைகளை தங்கள் பயன்பாட்டுக்காக வைத்துள்ளனர்

"
மின் விளக்குகள் இல்லாததால், முன்பெல்லாம் விஷப் பாம்புகள் கடித்து எங்கள் ஊரில் பல பேர் இறந்துள்ளனர். தற்போது விளக்குகள் எரிவதால் அந்த நிலை மாறியுள்ளதுஎங்கள் ஊரில் பலர் செல்போன் வைத்துள்ளார்கள். இங்குள்ள காடுகளில் விலையும் ஈச்சம் புற்களை அறுத்துக் கொண்டுவந்து காய வைத்துதுடைப்பம் செய்து, டவுனுக்குச் சென்று விற்கிறோம். இதில் தான் எங்களுக்கு அதிக வருமானமே கிடைக்கிறது. கிராமத்தினர் அனைவருக்கும் ஒரே ஒரு வருத்தம்தான். இங்கு மருத்துவமனை கிடையாது. அதனால் பெண்களின் கர்ப்பக் காலத்தில் பிரசவ வலியின்போது,எந்த நேரமாக இருந்தாலும் தொட்டில் கட்டி,நான்கு பேராக தூக்கிக் கொண்டு ஓடுவோம். 7 கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ்சைப் பிடித்து மருத்துவமனை செல்வதற்குள் பல பெண்கள் வலியால் சிகிச்சை கிடைக்காமல் இறந்திருக்கிறார்கள்” என்று வருத்தமுடன் சொல்கிறார் மாதவன் என்ற முதியவர்





மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. இப்போதே கிளம்பினால்தான் பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்று உடன் வந்த பாதுகாவலர்கள் கூற, கிளம்பத் தயாரானோம். அப்பொழுது ஒரு சிறுமி ஓடி வந்து ஆசையுடன் எதையோ கொடுத்தாள். வாங்கிப் பார்த்தோம். மலையில் பறித்த நாவற்பழங்கள்- கன்னங்கரேல் நிறத்தில். அவளுக்கு ஒரு ‘உம்மா’ கொடுத்துவிட்டு நாவல் பழங்களை தின்றவாறே, இறங்க மனமின்றி மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம்
அன்புடன்
சர்பனா

18 பிப்ரவரி, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - எப்பொழுதும் உன் கற்பனையே


"முப்பொழுதும் உன் கற்பனைகள்" தலைப்புக்கேற்ற மாதிரியே படமும் கவிதையா இருக்கு.இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு,எப்பொழுதும் உன் கற்பனையேன்னு காதலிக்கும் ஆண்கள் தங்கள் காதலிகளின் கற்பனைகளில் திரிவார்கள் என்பது மட்டும் நிஜம்.
நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்க்க காரணம்,"படத்தோட அழகான தலைப்பு,ஒருமுறைப் பாடல் (என்னோட ஃபேவரைட் பாட்டு ),மைனா படத்தில் கிடைத்த புகழை விட,முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் என்னை மேலும் உயரத்திற்கு கொண்டுப் போகும் என்று கூறிய அமலாபாலின் பில்டப்.இந்த 3 காரணங்களாலேயே படம் பார்க்க ஆவலா இருந்தேன்.


அமலாபால் கொடுத்த பில்டப்புக்கு,நல்லா நடிச்சி இருப்பாங்கன்னு பார்த்தேன்.மைனா இயக்கிய பிரபு சாலமனை தவிர வேறு எந்த இயக்குனரும் அமலாவிடம் இருந்து நடிப்பை வெளிக்கொணரவில்லை.மற்றவர்கள் வெறும் கவர்ச்சியை மட்டும் தான் வெளிக்கொண்டு வந்திருக்காங்க:)அமலாவோட  நடிப்பு யதார்த்தமா இல்லாம செயற்கை தனமாவே இருக்கு.( முகபாவனைகளை எப்படி வெளிப்படுத்துறதுன்னு வடிவேலுவை பயிற்சி கொடுக்க சொன்னாத்தான் சரிப்பட்டு வருவாங்கன்னு நினைக்குறேன்:) ஒருமுறை பாடலுக்கு அமலாபால் ஒரு டான்ஸ் ஸ்டேப் போடுவாங்கப் பாருங்க ராமராஜனே அந்த இடத்துல தோற்றுப் போய்டுவாரு:)))அமலா கதையோட ஒட்டவே இல்ல. 

ஐடி துறையில் வேலைப்பார்க்கும் அதர்வா தன்னுடன் புராஜெக்ட் செய்ய வந்த தோழி அமலாபால் மீது கண்மூடித்தனமாக காதல் கொள்கிறார்.இதுத் தெரியாத அமலாவோ, புராஜெக்ட் முடிந்தவுடன் அமெரிக்கா சென்றுவிட்டு வேறொருவருடன் நிச்சயதார்த்தமும் முடிந்து திருமணம் நடக்க 15 நாட்கள் இருக்கும் தருவாயில் அலுவலக வேலையாக சென்னை வருகிறார்.தன்னையே பைத்தியமாக காதலிக்கும் அதர்வாவை சந்தித்தாரா,இல்லையா,அவரது காதல் தெரிந்ததா,சேர்ந்தார்களா என்பதை த்ரில்லர் + ட்விஸ்ட்களோடு
சுவாரசியமா சொல்வது தான் முப்பொழுதும் உன் கற்பனைகள்.முதல் பாதியில் படத்தின் காட்சியமைப்புக்களை புரியாதது போல் அமைத்து,பின்பாதியில் அனைத்திற்கும் விடைக் கொடுத்திருப்பதில் இயக்குரனரின் சாமர்த்தியம் புரிகிறது. 


ஐடி துறையில் நடக்கும் உண்மையான சில அவங்களை பதிவு செய்ததற்காகவும்,நடுநடுவே ட்விஸ்ட்கள் வைத்து படத்தில் விறுவிறுப்பு கூட்டியதற்க்கும் இயக்குனர் எல்ரெட் குமாரை பாராட்டலாம்.எல்ரெட் குமாருக்கு இது முதல் படமாம்.(நம்பமுடியவில்லை என்னால் நம்பமுடியவில்லை:).அத்தனை முதிர்ச்சி.இயக்குனராக இருந்துக்கொண்டு படத்தையும் இவரே தயாரித்திருக்கிறார்.வாழ்த்துக்கள்!!!(ஆனால்,பார்த்திபனின் குடைக்குள் மழை படம் லைட்டா எட்டிப் பார்க்குது  சார்:)) 

படத்தின் நிஜ ஹீரோக்கள் காஸ்டியூம் டிசைனர்,அதர்வாவின் அம்மாவாக நடித்த அனுபமா,இசையமைப்பாளர் ஜி,வி பிரகாஷ் தான்.கதை ஐடி துறை என்பதால் படத்திலும்,பாடல்களிலும் அதர்வா,அமலாபாலின் காஸ்டியூம்கள் படத்தோடு ஒன்றி நம்மை ரசிக்க வைக்கிறது.அம்மாவாக நடித்திருக்கும் அனுபமா முகத்தில் ஓராயிரம் பாவனைகள்.தன் கணவர் இறந்தவுடன்,மற்ற ஆண்களின் கண்களில் இருந்து தப்புவதற்காக மொட்டையடித்து மூளியாக்கி கொள்வதாகட்டும்,மிரட்டி வட்டி வசூலிப்பதிலும்,தன் மகனுக்காக உருகுவதாகட்டும் நம்மையும் அவருடன் சேர்ந்து உருக வைத்துள்ளார்.இந்தப் படத்தில் நம் மனதில்  பதிவது அனுபமா மட்டுமே.சந்தானம் தன்னுடைய நக்கலான யதார்த்தமான
காமெடிகளால் நம்மை வயிறு குலுங்க ரசிக்க வைத்து சிரிக்க வைக்கிறார்.சந்தானம் அமலாபாலை கடத்தப்போகும் காட்சிகள் செம:)
 
ஜீவி பிரகாஷ் பின்னணி இசையிலும், பாடல்களிலும் மிரட்டியிருக்காரு.ஒருமுறை,கண்கள் நீயே பாடல்கள் மனதில் நிற்கும் ரகம்.ஒருமுறை பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது:)கண்கள் நீயே பாடல் நம் அம்மாக்களை நினைவுப்படுத்தி உருக வைக்கிறது."அந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பெய் மழை,இன்னிலை சொல்லுதே, என் காதலின் வானிலை" என்று வரிகள் அமைத்த பாடலாசிரியர் தாமரையின் பாடல் வரிகளை  பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை.கிரேட்!!!!
 
பாணா காத்தாடியை விட அதர்வாவோட நடிப்பு இதுல கம்மி தான்.ஆனா,நல்ல காதலனா நடிச்சிருக்காரு.அமலாபாலை பைத்தியமாவே காதலிப்பதாகட்டும்,பாடல்களின் டான்ஸ்,சண்டைக் காட்சிகள் அனைத்திலும் செம.ஆனால்,அதர்வாவின் குரலைக் கேக்கும்போது ஸ்பீக்கரை முழுங்கிட்டு பேசுறாரோன்னு தோணுது:)
 
அதர்வாவின் ஆழமான காதல்,ட்விஸ்ட்கள்,விறுவிறுப்பான கதை ஆகியவை படத்துக்கு ப்ளஸ்.அடிக்கடி வரும் பாடல் காட்சிகள்,சில இடங்களில் லாஜிக்கே இல்லாத காட்சியமைப்புகள்,அமலாபாலின் ஒட்டாத நடிப்பு இவையெல்லாம் படத்தின் மைனஸ்கள்.
 
இத்தனை மைனஸ்கள் இருந்தாலும் படம் முடியும்போது நம் மனம் பட்டாம் பூச்சியாய் பறந்து சந்தோசத்தில் சிறகடிப்பதை யாராலும் மறுக்க முடியாது.ஒரு அழகான காதல் கவிதையை ஃபோர் அடிக்காமல் 2 .30 மணி நேரம் சுவாரசியமாக நம்மை படிக்க வைத்த இயக்குனர் எல்ரெட் குமாருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!!! 

27 நவம்பர், 2011

மயக்கம் என்ன - புகைப்பட மயக்கம்

தன்னுடைய ஒவ்வொருப் படத்திலும் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும், செல்வராகவனுக்கு முதலில் வாழ்த்துக்கள். ஏன்னா, 'மயக்கம் என்ன" படத்தை நெகட்டிவாக முடிக்காமால்  உணர்ச்சிபூர்வமாக நெகிழ்ச்சியோடு முடிய வைத்ததற்கு!!

மொக்கை பீஸைக் கூட அழகான தேவதைகளாக காட்டும் புகைப்படகாரர்களின், இரவுப் பகல் தாண்டிய உழைப்பையும், போராட்டங்களையும், பாதிப்புக்களையும் சொல்வது தான் மயக்கம் என்ன. ஆனால் புகைப்படக்காரனின் வலிகளை சரியாகச் சொல்லாமல், தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல் காட்டிவிட்டு, படம் முழுக்க காமத்தையும், காதலையுமே சொல்லி இருப்பது அலுப்பை ஏற்ப்படுத்துகிறது.

இரும்புப் புடிச்சக் கையும், சொரங்குப் புடிச்சக் கையும் சும்மாவே இருக்காது. அதுப் போலத்தான் எந்நேரமும் கேமராக் கையோடவே அலையும் தனுஷ், வித விதமான போட்டோக்கள் எடுத்து தன்னை நேச்சுரல் புகைப்படக்காரராக சேர்த்துக் கொள்ளும்படி பெரியப், பெரிய நிறுவனங்களாக ஏறி இறங்குகிறார். அது மாதிரி,ஒரு நிறுவனத்திற்கு வேலைக் கேட்டுச் செல்லும்போது, தனுஷ் எடுத்த போட்டோக்களை தான் எடுத்ததாக கூறி, உலக புகழ்ப் பெறுகிறார் பிரபலமாக இருக்கும் போட்டோகிராபர் ரவிசங்கர். தான் ஏமாற்றப் பட்டத்தை அறிந்த தனுஷ், அதன் பிறகு எடுக்கும் கிறுக்கலான முடிவுகளே மயக்கம் என்ன. செல்வராகவன் படத்துக்கே உரிய காதல், காமம், காமெடி, துரோகம் எல்லாத்தையும் காட்டியிருக்காகாங்க.

சில இடங்களில் தனுஷின் நடிப்பு யதார்த்தமாகவும், சில காட்சிகளில் நடிப்பே வராமல் திண்டாடி இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது. பாடல்களைத் தவிர படம் முழுக்க தனுஷ் முகத்தை பார்க்கவே சகிக்கல. எந்நேரமும் வெறுப்புடன்  சோர்வாக காட்டி படம் பார்ப்பவர்களையும் வெறுப்பேற்றுகிறார்கள். காஸ்டியூமிலும், முகத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


காதல் என்பது ஒருமுறை தான் வரும், ஒருத்தவங்க மேல தான் வரும்.ஒரு தடவை மட்டும் தான்  பூக்கும் என்ற விஜய் படம்,விக்கரமன் பட டயலாக் எல்லாத்தையும் உடைச்சி, காதல் அழகானது. எத்தனை முறை வேணாலும் வரலாம், பிடிச்சி இருந்தால் யார் மேலும் வரலாம், எந்த சூழ்நிலையிலும் வரலாம் என்று இப்படம் மூலம் யதார்த்த உண்மையை சொன்ன செல்வராகவனை நிச்சயமாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

தனுஷின் நண்பனின் காதலியாக வந்து, பின்னர் தனுஷையே காதலித்து திருமணம் செய்யும் ஹீரோயின் ரிச்சா முன் பாதியில் வெறும் காமப் பொம்மையா வந்து, பின் பாதியில் தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து பின்னி எடுத்திருக்காங்க. ரிச்சா நடிக்கத் தெரிந்த சிறந்த நடிகை என்று, அவங்க முகப் பாவனைகளே சொல்லாமல் சொல்கிறது. தன்னுடைய பட ஹீரோயின்களை  எப்பொழுதும் காமப் பார்வையோடு கண்ணை உருட்டி பார்த்து, சோகமாக காட்டுவதுப் போலவே ரிச்சாவையும் படம் முழுக்க சோகமாவே காட்டி இருக்காரு செல்வராகவன். மொக்கையா இருக்குற பெண்களையும் பேரழகியா காட்டுவது கெளதம் மேனன் ஸ்டைல். பேரழகியையும் மொக்கை பீஸா, அழு மூஞ்சியாக் காட்டுவது செல்வராகவன் ஸ்டைல்.


படத்தோட நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் ராம்ஜி தான். கண்களிடமும்,கேமராவிடமும் வேலை வாங்கத் தெரிந்தவன்  தான் சிறந்த ஒளிப்பதிவாளன். தன்னை சிறந்த ஒளிப்பதிவாளர் என்று நிருபிச்சிருக்காரு ராம்ஜி. சிறுப்  புல்லும், ஒற்றைப் பனித்துளியையும் புகைப்படக்காரர்கள் கொண்டாடும்  இயற்கையின் வரப் பிரசாதங்கள். இயற்கையின் அழகையும், அவற்றின் உயிர்த் துடிப்புக்களான பறவைகளையும், அதிசய விலங்குகளையும் படத்தின் இடையிடையே ,அழகாகக்  காட்டி நம்மை பிரமிக்க வைத்துள்ளார்.

படத்தின் பெரிய பலம் பாடல்களும், பின்னணி இசையும் தான்.ஜி.வி பிரகாஷ் பின்னி எடுத்திருக்காரு. பொதுவாக படம் வெளியாவதற்கு முன் பாடல் ஹிட் ஆகிவிட்டால், பாடல் படத்தில் எப்படி இருக்குமோ என்று பெரிய எதிர்ப்பாபோடு, அதற்காகவே போய்ப் படம் பார்ப்போம். ஆனால் பலப் பாடல்களின் காட்சியமைப்புகள் சம்மந்தமே இல்லாமல்,நம் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி ஏமாற்றத்தை கொடுக்கும். ஆனால் இந்தப் படத்தில் வோட, வோட பாடல் காட்சியமைப்பு சான்சே இல்லை. நாம் எதிர்ப்பார்த்ததை விட 100 மடங்கு சூப்பரோ, சூப்பர். எத்தனை முறை வேணாலும் பார்க்க வைத்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. மயக்கம் என்ன  படம் வெளியாவதற்கு முன் இளைஞர்கள் மத்தியில் இது, ஒருக் காதல் தோல்விப் படம் என்று உணரவைத்தது "காதல் என் காதல், அது கண்ணீருல" பாடல். இந்தப் பாட்டு அந்தப் படத்துக்கு தேவையே இல்லாதப் பாட்டு. தேவையான இடத்துலும் இந்தப் பாட்டை வைக்கல.வேஸ்ட். "நான் சொன்னதும் மழை வந்துச்சாப்' பாட்டு இந்த மழைநாளில் கேட்டுக் கொண்டே மழையை ரசிக்கும் ரகம்.

பெண் என்பவள் நேரில் வாழும் கடவுள் என்று காலம் எவ்வளவு முன்னேறினாலும், எந்த இயக்குனர்களும் காட்ட முன்வருவதில்லை, ஏன்னா, படம் ஓடாது, பசங்களுக்கு பிடிக்காது என்கிற மாயை. இதை அப்படியே செஞ்சிருக்காரு செல்வராகவன். போதைப் பொருளாகவே சித்தரித்து, தன்னுடைய அருவருக்கத்தக்க வசனங்களால், தகாத வார்த்தைகளால் திட்டியும், வெட்றா அவள, குத்துடா அவள என்று பாடலையும் வைத்து பெண்களை இழிவுப் படுத்திருக்கார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். 


வியட்நாம் போரின்போது தீப்புண் காயம்பட்டு அழுதுகொண்டே நிர்வாணமாக
  ஓடிவந்த சிறுமியை நிட் உக் என்ற புகைப்படக்காரர் வெளியுலகத்திற்கு படம் எடுத்துக் காட்டியதால் தான், மக்களுக்குப் போரின் மீது  கசப்புணர்வும், விழிப்புணர்வும் ஏற்ப்பட்டது. சூடான் நாட்டில்  ஒரு குழந்தை எலும்புகள் தெரிய இருப்பதையும், அந்தக் குழந்தையை கழுகு ஒன்று தின்னக் காத்திருப்பதையும் படமாக எடுத்தப் புகைப்படக்காரர் கெவின் கார்ட்டர் மூலம் தான் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வறுமை பெரிதளவில் மக்களிடையேயும், உலக நாடுகளாலும் பேசப்பட்டது.புகைப்படக்காரர்களால் அனைத்தையும் வெளிக்கொணர முடியும். ஆனால் புகைப்படம் பற்றிக் கதையமைத்துவிட்டு, அதுப் பற்றி அழுத்தமான காட்சிகளைப் பதிவு செய்யாமல், சம்மந்தமில்லாத திடீர், திடிரென  வரும்  காட்சியமைப்புகள் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

மாடியிலிருந்து கீழே விழுந்தால் நிச்சயம் இறப்பார்கள், இல்லையென்றால் அடிப்படும். ஆனால், தான் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சியினால் அவ்வளவுப் பெரிய   மாடியிலிருந்து கீழே விழுந்த தனுஷ் அடியேதும் படாமல் இருப்பது லாஜிக் மீறல். படம் முழுக்க சாக்கடைப் போன்ற டபுள் மீனிங் வசனங்களால் காது கொடுத்து கேட்க முடிவதில்லை. படத்துல மதுப் பாட்டில்கள் தான் நம்மக்கூட பயணம் செய்யுது. எல்லா இடத்திலும் வர மது தான், படம் பார்க்கும் ஆண்களின் கவனத்தை ஈர்க்கும்.

இரவை மணிரத்தினத்திற்கு அடுத்து அழகா காட்டத் தெரியும் கலை செல்வராகவனுக்கு மட்டும் தான் தெரியும் போல. இரவையும், தனிமையும் அழகாக் காட்டி இருக்காரு. மொத்ததுல இந்தப் படம் புகைப்படத் துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு, ஒரு சின்ன டானிக் குடிச்ச சந்தோசம் மாதிரி தான். பெண்களை இழிவுப் படுத்துற வசனங்கள் இருப்பதால் ஆண்களுக்கும் மயக்கம் என்ன  பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு? செல்வராகவனின் அடுத்தப் படத்திற்கு போனால், நிச்சயமாக நான் பஞ்சு எடுத்துட்டுப் போவேன்.

மொத்தத்தில் மயக்கம் என்ன - புகைப்பட மயக்கம்

21 அக்டோபர், 2011

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்!

சட்டமன்றம், நாடாளமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தரக் கூடாது என்று பல அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கும் நம் நாட்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள, நாட்டார்மங்கலம் கிராம மக்கள் உள்ளாட்சித்  தேர்தலில் தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்துப் பதவிகளையும் பெண்களுக்கு மட்டுமே வழங்கி 100 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பென்றால் அத்தனை பெண்களும் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள்!!!
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
"காட்டுமன்னார்கோவில் தொகுதியிலேயே மிகப் பெரிய கிராமம் என்ற சிறப்பும், அதிக மக்கள் தொகைக் கொண்ட கிராமம் என்ற பெருமையும், எங்க ஊருக்கு மட்டும் தான் உண்டு. 2500 குடும்பங்கள் வசித்து வரும் இங்கு, தலித், வன்னியர், பிள்ளைமார், முதலியார் போன்ற அனைத்து சாதி மக்களும் வசித்து வருகிறோம். எப்பொழுதுமே எனக்கு சாதி, மதத்தின் மீது நம்பிக்கை கிடையாது. கிராம மக்கள் அனைவரும் நீங்க தான் ஊராட்சி மன்றத் தலைவி பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைத்தார்கள். நான் அவர்களிடம் நம் கிராமத்தை முன்னேற்ற வேண்டுமென்றால் வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் பெண்களாக போட்டியிட வைக்க வேண்டுமென்றும், கிராமத்தை இந்தியாவிலேயே முன்மாதிரியாக மாற்ற எல்லோரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்ற  இரண்டுக் கோரிக்கைகளை வைத்து, இதற்கு சம்மதித்தால் தான், நான் தேர்தலில் நிற்பேன் என்று கூறினேன். இதைக் கேட்டக் கிராம மக்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டனர். தலித் மக்கள் வாழும் பகுதியில் 5 வார்டுகளும், முதலியார்கள் பகுதியில் 3 வார்டுகளும், வன்னியர், பிள்ளைமார்  இருக்கும் பகுதிகளில் 1 வார்டும் உள்ளது. இந்த வார்டுகளில் இருந்து ஆளுமைத் திறன் கொண்டப் பெண்களாகப் பார்த்து மக்களே தேர்ந்தெடுத்தனர். இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, மாறாக, வரவேற்றார்கள். பின்னர் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் முன் சாதி, மதம் பார்க்காமல் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலனிற்கும் பாடுபடுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு, ஒரு  நல்ல நாளில் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தோம். எங்களுக்கு எதிராக யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அனைவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டோம் என்று சொல்லும் ஊராட்சிமன்றத் தலைவி சுதா மணிரத்தனம் "ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்புகள் அதிகமாக குவிந்துக் கிடக்கிறது. அதை வரவேற்க தகுதி இருந்தும் ஒதுக்கிவிடும் பெண்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது என்றும் வருத்தமான குரலில் சொன்னார்.

"
கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான குடித்தண்ணீர், மருத்துவ வசதி, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி என்று சொல்லிக் கொள்ளும்படி எதையும் செய்து தரவில்லை. கிராமத்தின் நிலை மோசமாக இருந்ததால், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எங்கள் கிராமத்தைப் பற்றி கேலியாகப் பேசி சிரிப்பார்கள். இதனால், பெருத்த அவமானம் அடைந்த நாங்கள், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியதைத் தொடந்து 6 மாதத்திற்கு முன்னரே, ஊரில் உள்ள அனைத்து சாதி மக்களையும் சிவன் கோவில் அருகே, ஒன்றுத் திரட்டி கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டினோம். அரசியல் கட்சிகளை சார்ந்து போட்டியிட்டால், வெற்றிப் பெற்றக்  கட்சிக்காரர்கள் மட்டுமே அதிக பலனை அனுபவிப்பார்கள் என்று சுயேட்ச்சைகளாக நிறுத்த முடிவு செய்தோம். ஒருத் தலைமை, ஒரே சொல், ஜாதி, மதம் இல்லாமல் ஒரேக் கட்டுப்பாட்டின் கீழ் அனைவரும் இருக்கவேண்டுமென்று சபதம் எடுத்தோம். பின்னர் யாரை ஊராட்சி மன்றத் தலைவியாக நிறுத்தலாம் என்று எங்களுக்கு கேள்வி எழுந்தப்போது அனைவரின் கண் முன்னும் வந்தவர், எங்களின் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவி சுதா மணிரத்னம் தான். ஏனென்றால் அவர் எம்., பி.எட் படித்தவர். ஊரில் அதிகப் படிப்புப் படித்த பெண்மணி என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பல ஆண்டுகள் பணியாற்றி விட்டு, சமூக சேவை செய்வதற்காக தன்னுடைய வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து வி.ஆர்.எஸ் வாங்கிவிட்டார். பின்னர் ஊரில்  உள்ள ஏழை  மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் எடுத்தும், 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவகளை ஊக்கப்படுத்தி கல்வி உதவித் தொகையும் வழங்கி வந்தார். அதுமட்டுமில்லாமல், எந்த சாதியினராக இருந்தாலும், அவர்களது வீட்டில் யாரவது இறந்துவிட்டால் முதல் ஆளாகச் சென்று உறவினர் போல் துக்கம் விசாரிக்கும் அவரது நல்ல குணத்தையும் நாங்கள் அறிவோம். கிராம மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் சுதா அம்மாவிடம் தான் செல்வோம். அவரும் முகம் சுளிக்காமல் அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். ஊராட்சிமன்றத் தலைவி முடிவானப் பிறகு, மீதமுள்ள  9 வார்டுகளுக்கு பெண் கவுன்சிலர்களை அனைத்து சாதியிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். விவசாயக் கூலிகளான, அவர்கள் அனைவருமே 8 -ம் வகுப்புக்கு மேல் படித்த தன்னம்பிக்கை நிறைந்த மனுஷிகள். களை வெட்டுதல், நடவு வேலை, சித்தாள் வேலை செய்தல் என்று அனைத்து வேலைகளையும் செய்வார்கள். பெண்களாக தேர்ந்தெடுக்கப்பட்டத்தை நினைத்து, கிராம ஆண்கள் பெருமைப்படுக்றோம். இப்பெண்களின் மூலம் கிராமத்திற்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று வார்த்தைகளில் நம்பிக்கைத் தெறிக்க நம்மிடம் பேசினார் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்"
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
"தீபா, முத்துலட்சுமி, லட்சிய வீரமணி, அஞ்சலை தேவி, கண்ணகி, ராதா, தமிழரசி, வேம்பு, விசாலாட்சி ஆகிய 9 பேரும் கவுன்சிலர் உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளோம். எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அனைவரும் பெண் என்பதால், பணி செய்ய எவ்விதப் பிரச்சனையும் இருக்காது. ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து மக்கள் பணி செய்வோம். இந்த ஊரில் மக்கள் பிரச்சனை என்ற சொல்லுக்கே இடம் அளிக்காத வகையில், சிறப்பாக பணி செய்து, தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக எங்கள் கிராமத்தை மாற்றிக் காட்டுவோம். இதற்காக, அரசு புறம்போக்கு இடத்தை முறையாக பயன்படுத்துதல், கூரையில்லா வீடு, வீடுகளுக்கு கழிப்பறை வசதி, இளைஞர்களுக்கு விளையாடவும், உடற்ப்பயிற்சி செய்யவும் மைதானம் அமைத்தல், மருத்துவமனையை ஒழுங்குப்படுத்துதல், ஊரில் உள்ள 10 ,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி தனி வகுப்பு எடுத்தல், மின்சாரம், குடிநீர் தேவை, சாலை வசதிகள் நிறைவேற்றுதல், கிராமத்திலேயே வேலை வாய்ப்புக்களை உருவாக்கி அனைவரையும் சுயமாக சம்பாதிக்க வைத்து பொருளாதாரத்தில் முன்னேற்ற வைப்போம் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். நிச்சயமாக வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு நிறைவேற்றுவோம். நாங்கள் அனைவரும் பெண்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அருகில் உள்ள மற்றக் கிராமத்தினர், எங்களைப் பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்து பாராட்டுவதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. எங்களைப் போல் மற்றக் கிராமத்தினரும் பின்ப்பற்றி, பெண்களுக்கு வாய்ப்பு அளித்தால் நிச்சயம் சாதித்துக் காட்டுவார்கள் என்று உறுதியானக் குரலில் நம்மிடம் பேசினார் வார்டு உறுப்பினர் தமிழரசி.
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
 ஆண்கள் செய்யும் வேலைகளை பெண்கள் பங்குப் போட்டுக் கொண்டதால் வருமானம் பெருகியதோ இல்லையோ, பல புதிய வாய்ப்புகள் மட்டும் பெருகியது மட்டும் நிஜம். அதற்கு சாட்சியாக வாழ்கிறார்கள் நாட்டார் மங்கலம் கிராம பெண்கள்.
 

அன்புடன்,
பூ. சர்பனா.